மூன்று நாள் பயணமாக பிலிப்பைன்ஸ் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி

15 வது ஆசியன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
மூன்று நாள் பயணமாக பிலிப்பைன்ஸ் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி
Published on

புதுடெல்லி,

15-வது ஆசியான் மாநாடு பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் நாளை (13-ந்தேதி) நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்ற பிரதமர் மோடி, பிலிப்பைன்ஸ் சென்றடைந்தார்.

இந்த மநாட்டில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, சீன பிரதமர் லீ கெ கியாங், ரஷிய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ், ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், வியட்நாம் பிரதமர் கியூயன் ஷூயாங் புக், நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டன், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூட்ரேட் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் அதில் கலந்து கொள்கின்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் மாநாட்டில் பங்கேற்கிறார். தற்போது ஆசிய நாடுகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கிடையே மாநாட்டின் இடை வேளையில் அமெரிக்க அதிபர் டிரம்பை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கிறார்.

அப்போது இருநாட்டு தலைவர்களும் சர்வதேச நிலவரம் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்டவை குறித்து பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். மேலும் ரஷிய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ், சீன பிரதமர் லீ கெ கியாங் மற்றும் வெளிநாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் கிழக்கு ஆசிய மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com