

புதுடெல்லி,
ஆங்கிலேய அடிமை ஆட்சியிலிருந்து பாரத தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன்பு, 1919ம் ஆண்டு ஏப்ரல்-13ம் தேதியன்று ஜாலியன்வாலாபாகில் அகிம்சை வழியில் போராடிய சுதந்திர போராட்ட வீரர்கள், பிரிட்டிஷாரால் சுட்டு கொல்லப்பட்டனர். ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு அதில் உயிர்த்தியாகம் செய்தோருக்குப் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
பிரிட்டிஷாரை எதிர்த்து இந்திய விடுதலைப்போர் தீவிரமடைந்து கொண்டிந்தபோது ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ஏராளமான இந்தியர்கள் கூடியிருந்த ஒரே இடத்தில் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நாளான இன்று தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
1919-ல் இதே நாளில் பிரிகேடியர் ஜெனரல் ரெஜினோல்ட் டையரின் உத்தரவின் பேரில் அமிர்தசரஸ் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் அறுவடைத் திருவிழாவான பைசாக்கியைக் கொண்டாடுவதற்காக கூடியிருந்த இந்திய மக்கள் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இது இந்திய சுதந்திரப் போர் வரலாற்றில் தீராத வடுவை, கரும்புள்ளியை ஏற்படுத்தியது.
ஜாலியன்வாலா பாகில் இன்னுயிர் நீத்தவர்களின் நினைவாக, புதுப்பிக்கப்பட்ட ஜாலியன்வாலா பாக் நினைவு வளாகத்தின் தொடக்க நிகழ்வில் கடந்த ஆண்டு நிகழ்த்திய உரையையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
1919-ல் இதே நாளில் ஜாலியன்வாலா பாகில் உயிர்த்தியாகம் செய்தோருக்கு அஞ்சலி. இவர்களின் இணையற்ற துணிவும், தியாகமும் வரும் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும்.
புதுப்பிக்கப்பட்ட ஜாலியன்வாலா பாக் நினைவு வளாகத்தின் தொடக்க நிகழ்வில் கடந்த ஆண்டு நிகழ்த்திய எனது உரையைப் பகிர்ந்துள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.