

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்தது சமீபத்தில் தெரியவந்தது. இருவரும் இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டனர்.
வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. மோசடி தொடர்பான விசாரணை தொடங்கியதுமே விசாரணைக்கு ஆஜராக சம்மன் விடுக்கப்பட்டது. ஆனால் இருவர் தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. வெளிநாடுகளில் உள்ள அவர்களை இந்தியாவிற்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் நிரவ் மோடியின் வெளிநாட்டுக்கள் சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது.
இம்மாத தொடக்கத்தில் பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் நிரவ் மோடியின் வெளிநாட்டுக்கள் சொத்துக்கள் உள்பட ரூ. 637 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கியது. சொத்துக்கள், நகைகள், அப்பாட்மென்ட்கள் மற்றும் இந்தியா, இங்கிலாந்து, நியூயார்க் உள்பட பிற நாடுகளில் உள்ள வங்கி சேமிப்புக்களும் இதில் அடங்கும் என அமலாக்கப்பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சில வழக்குகளில் மட்டும்தான் கிரிமினல் விசாரணையில் இந்திய முகமைகள் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களைமுடக்கம் செய்யும்.
இப்போது பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் நிரவ் மோடியின் ஹாங்காங் சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது. ரூ. 255 கோடி மதிப்பிலான நகைகள், சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது, இதில் கோர்ட்டு உத்தரவுடன் பிற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.