

புதுடெல்லி,
மும்பையைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி நாட்டின் 2வது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாங்கிய ரூ.12,723 கோடி கடனை திரும்பச் செலுத்தவில்லை. இந்த ஊழல் அம்பலத்துக்கு வருவதற்கு முன்பே அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்.
மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் தீவிரமாக விசாரித்து வருகிறது. விசாரணை முகமைகள் சோதனைகள் மற்றும் பறிமுதல் நடவடிக்கையை தொடர்ந்து வருகின்றன. நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி மற்றும் அவர்களுடைய நிறுவனங்களின் சொத்துக்களையும் விசாரணை முகமைகள் பறிமுதல் செய்து வருகின்றன.
அந்த வகையில், நிரவ் மோடி குடும்பத்தினருக்கு சொந்தமான, காற்றாலை பண்ணையை, அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மாரில், நிரவ் மோடி குடும்பத்தினருக்கு சொந்தமாக காற்றாலை பண்ணை உள்ளது. இந்த பண்ணையின் மதிப்பு, 52.80 கோடி ரூபாய். இதுவரை, 691 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.