

மும்பை,
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் ரூ.11,700 கோடி அளவுக்கு மோசடி நடந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பி உள்ளது. இது தொடர்பாக மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடிக்கு எதிராக சி.பி.ஐ. அமைப்பிடம் வங்கி நிர்வாகம் சமீபத்தில் புகார் அளித்தது.இதில் கடந்த ஆண்டு நடந்த சுமார் ரூ.280 கோடி மோசடி தொடர்பாக நிரவ் மோடி, அவரது மனைவி அமி, சகோதரர் நிஷால், வர்த்தக கூட்டாளி மெகுல் சோக்ஷி மற்றும் 2 வங்கி அதிகாரிகள் ஆகியோர் மீது கடந்த மாதம் 31-ந்தேதியே சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு பதியப்படும் முன்னே நிரவ் மோடி குடும்பத்துடன் வெளிநாடு தப்பி சென்றது அம்பலமாகி இருக்கிறது. அதாவது நிரவ் மோடியும், அவரது சகோதரர் நிஷாலும் கடந்த மாதம் 1-ந்தேதி இந்தியாவை விட்டு வெளியேறி உள்ளனர். இதில் நிஷால் பெல்ஜியம் நாட்டு பிரஜை ஆவார்.இதைப்போல மோடியின் மனைவியும், அமெரிக்க பிரஜையுமான அமி, அவர்களது வர்த்தக கூட்டாளி மெகுல் சோக்ஷி இருவரும் கடந்த மாதம் 6-ந்தேதி வெளிநாடு சென்றுள்ளனர். எனவே அவர்களுக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் சி.பி.ஐ. சார்பில் கவன ஈர்ப்பு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
நீரவ் மோடி சுவிட்சர்லாந்தில் இருக்கலாம் என்று நேற்று செய்திகள் வெளியான நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள நட்சத்திர சொகுசு விடுதியில் குடும்பத்துடன் தங்கியிருப்பதாக ஆங்கில செய்தி சேனலில் செய்தி வெளியானது. இந்த நிலையில், நீரவ் மோடியை கண்டறிய இண்டர்போல் உதவியை சிபிஐ நாடியுள்ளது.