ஆந்திராவில் விஷவாயு விபத்து; அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

ஆந்திராவில் ஏற்பட்ட விஷவாயு விபத்து பற்றி அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
ஆந்திராவில் விஷவாயு விபத்து; அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
Published on

புதுடெல்லி,

ஆந்திர பிரதேசத்தில் விசாகப்பட்டினம் நகரில் ஆர்.ஆர். வேங்கடாபுரம் கிராமத்தில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலை ஊரடங்கால் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீரென ஆலையில் இருந்து ஸ்டைரீன் என்ற ரசாயன வாயு கசிந்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு கண்களில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டதுடன், சுவாச பாதிப்புகளும் ஏற்பட்டன.

இந்த விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர். கிராமத்தில் இருந்த 1,500க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். அந்த பகுதியில் வசித்து வந்த 800 பேர் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதனை தொடர்ந்து ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியிடம், நிலைமை பற்றி தொலைபேசி வழியே பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார். அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என அவரிடம் உறுதியும் அளித்துள்ளார்.

விசாகப்பட்டினத்தில் உள்ள ஒவ்வொருவரின் பாதுகாப்புக்கும் மற்றும் நலனுக்காகவும் நான் வேண்டி கொள்கிறேன். நிலைமை உன்னிப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது என பிரதமர் மோடி கூறினார்.

இதனையடுத்து, மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில், மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு, நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. அனைவரும் முக கவசங்களையும் அணிந்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com