

புதுடெல்லி,
டெல்லி ஜமியா நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருப்பவர் ராகேஷ் குமார். கொள்ளை வழக்கில் தொடர்புடைய நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், அந்நபரின் சகோதரிக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், உனது சகோதரர் கடத்தப்பட்டு உள்ளார். ரூ.3 லட்சம் பணய தொகை தரவேண்டும். அதனை சராய் காலே கான் பகுதிக்கு கொண்டு வரவேண்டும் என்று கூறி மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்துபோன அந்த பெண், டெல்லி சன்லைட் காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதில், ராகேஷ் குமார் என்ற தலைமை காவலர் அந்த நபரை ஜமியா நகர் காவல் நிலையத்தில் மறைத்து வைத்து இருந்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து அவர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். கடத்தலில் ஈடுபட்டதற்காக போலீசார் அவரை கைது செய்தனர். ராகேசின் 2 கூட்டாளிகள் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.