

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கே.பி.அக்ரஹாரா காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் கோவிந்தராஜு. இவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான அக்பர் என்பவரை மோசடி வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக ரூ.5 லட்சம் பணத்தை லஞ்சமாக கேட்டுள்ளார். இதன்படி கடந்த 24-ந்தேதி அக்பர் ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார்.
மீதமுள்ள பணத்தை விரைவில் கொடுத்துவிடுவதாக கோவிந்தராஜுவிடம் கூறிய அக்பர், இது தொடர்பாக லோக் ஆயுக்தா போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து லோக் ஆயுக்தா போலீசார், கோவிந்தராஜுவை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். இதன்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அக்பரிடம் கொடுத்து, அதனை கோவிந்தராஜுவிடம் கொடுக்குமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதன்படி சமராஜ்பேட் பகுதிக்கு கோவிந்தராஜுவை வரவழைத்து, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அக்பர் அவரிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லோக் ஆயுக்தா போலீசார், கோவிந்தராஜுவை மடக்கிப் பிடித்து அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்படும்போது இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் குழந்தை போல் அலறி ஆர்ப்பாட்டம் செய்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.