

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கலபுரகியில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இந்த சிறையில் இருந்த மஸ்தான், சந்தோஷ், சாகர் ஆகிய 3 கைதிகள் துணியை கயிறாக கட்டி பெரிய மதில்சுவரை தாண்டி தப்பி சென்றனர்.
இதையடுத்து தப்பி ஓடிய கைதிகளை பிடிக்க கலபுரகி நகர போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பீதர் போலீசார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அப்போது தப்பி ஓடிய சந்தோஷ் என்ற கைதி கபானூர் தொழிற்பேட்டையில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் இன்று அதிகாலை அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் சந்தோஷ் தாக்க முயன்றார். இதையடுத்து போலீசார் சந்தோஷ் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் 2 போலீசாரும் காயம் அடைந்தனர். இதையடுத்து துப்பாக்கி சூட்டில் காயமடைந்த கைதி சந்தோசை கலபுரகி பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
மேலும் 2 போலீசாரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் தப்பி ஓடிய 2 கைதிகளை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் காரணமாக சிறை சூப்பிரண்டு ராகேஷ் காம்ப்ளே சஸ்பெண்டு செய்யப்பட்டார்.