புதுச்சேரி: தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணை 21-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

மரிய வில்சன் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி, நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரும் மனு மற்றும் வழக்கில் இருந்து அவரை விடுவிக்க கோரும் மனுக்கள் மீது வாதாட கால அவகாசம் கோரினர்.
புதுச்சேரி: தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணை 21-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
மரிய வில்சன்
Published on

புதுச்சேரி,

தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீது, புதுச்சேரி லாஸ்பேட்டை போலீசார் பதிவு செய்த அடிதடி வழக்கு விசாரணை, புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 21-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

சகோதரர் வீட்டில் தகராறு

கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந் தேதி, புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் தனது சகோதரர் மரிய குளோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, அவருக்கும் அவரது மனைவி கெரோலினுக்கும் கொலை மிரட்டல் விடுத்து தாக்கியதாக அமைச்சர் மரிய வில்சன் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நீதிமன்ற உத்தரவு

புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொள்ள அமைச்சர் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார். சென்னை ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்த தள்ளுபடி மனுவும், சமரச மைய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், அவர் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, கடந்த 4-ந் தேதி அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி கோர்ட்டில் நேரில் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொண்டார்.

21-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் மரிய வில்சன் கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி, நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரும் மனு மற்றும் வழக்கில் இருந்து அவரை விடுவிக்க கோரும் மனுக்கள் மீது வாதாட கால அவகாசம் கோரினர். இதனை ஏற்ற நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் செப்டம்பர் 21-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com