

புதுச்சேரி,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பொருட்களுடன் ரூ.3,000 பொங்கல் பரிசுத்தொகையையும் அறிவித்தது.
பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் ரூ.3,000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என அந்த மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதாவது புதுச்சேரியில் உள்ள 3.40 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3.000 பொங்கல் பரிசுடன் ரூ.750 மதிப்பு கொண்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்படும் என புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பகுதிகளில் வசிக்கும் 3.40 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு கிடைக்கும். இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக தமிழகத்தை போல் ரூ.3,000 பணத்தை கையில் வழங்காமல் இன்று அவரவர் வங்கிக் கணக்கிலேயே பணம் செலுத்தப்படுகிறது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி பொங்கல் பரிசு ரூ.4,000 வழங்கப்படும் என முதலில் தெரிவித்து இருந்தார். இதற்காக ஆளுநரிடம் ரூ.140 கோடி நிதி ஒதுக்க ஆளுநரிடம் அவர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மாநிலத்தில் ஏற்கெனவே நிதிச்சுமை காரணமாக ஆளுநர் அதற்கு மறுத்து விட்டார். இதனால் வேறு வழியின்றி புதுச்சேரி அரசு ரூ.3,000 கொடுப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.