

புதுடெல்லி,
பொருளாதார பெருந்தொற்றுக்கு ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் உயிரிழந்து வருவதாக பாஜக அரசை முன்னாள் காங்கிரஸ் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், நாடு முழுவதும் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரும் மோடி அரசாங்கத்தின் பொருளாதார தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளியை தோண்டி எடுத்த பெருமை மத்திய அரசையே சாரும் என்று அதில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.
மேலும் சமீபத்திய ஆய்வை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி பகிர்ந்துள்ள செய்தியில், கடந்த ஐந்து ஆண்டுகளில், ஏழை 20 சதவீத இந்திய குடும்பங்களின் ஆண்டு குடும்ப வருமானம் சுமார் 53 சதவீதம் குறைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல், 20 சதவீதத்திற்கு கீழ் நடுத்தர மக்களின் குடும்ப வருமானமும் 32 சதவீதம் குறைந்துள்ளது.
இந்தச் அறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில், நாட்டில் உள்ள 20 சதவீத பணக்காரர்களின் வருமானம், 39 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.