

உலகிலேயே மிகப்பெரிய அளவுக்கு காணொலி காட்சி மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பேசினார். கோடிக்கணக்கான தொண்டர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக டெல்லி முதல்வர் பிரதமர் மோடிக்கு கோரிக்கை ஒன்றை விடுத்தார். இதுதொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் வரிசையாக வெளியிட்ட செய்தியில், பா.ஜனதா தொண்டர்கள் மத்தியில் வீடியோ காணொலி காட்சியில் பேசும் நிகழ்ச்சியை பிரதமர் மோடி ஒத்திவைக்க வேண்டும். இப்போது பாகிஸ்தான் ராணுவம் வசம் சிக்கி இருக்கும் இந்திய விமானப்படை வீரரைப் பத்திரமாக மீட்டு வருவதில்தான் நம்முடைய சக்தி முழுவதையும் செலவிட வேண்டும். என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இதேபோன்று ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறுகையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் தேசப்பாதுகாப்பு குறித்து கவலைப்படுகிறது. டெல்லியில் கெஜ்ரிவால் உண்ணாவிரதப் போராட்டத்தை ஒத்திவைத்துவிட்டார். காங்கிரஸ் கட்சி தங்களின் செயற்குழுக் கூட்டத்தை ஒத்திவைத்துவிட்டது. நாட்டின் ஒற்றுமை குறித்து எதிர்க்கட்சிகள் கவலையடைந்துள்ளது. ஆனால், பிரதமர் மோடி, வாக்கு சாவடியை வலிமைப்படுத்துவது குறித்தும், பா.ஜனதாவின் தேர்தல் பிரச்சாரத்திலும் பரபரப்பாக இயங்குகிறார், என விமர்சனம் செய்தார்.
இருப்பினும் திட்டமிட்டப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய வீரர் அபிநந்தன் பாகிஸ்தானின் பிடியில் சிக்கியுள்ளார் என்று இந்திய அரசு உறுதி செய்தது மற்றும் காஷ்மீரில் ஹெலிகாப்டர் விபத்தில் 6 விமானப்படை வீரர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பின்னர் பிரதமர் பேசிய முதல் பொதுக்கூட்டம் இதுவாகும். பிரதமர் மோடி பேசுகையில், இந்திய தேசம் ஒன்றாக வாழ்ந்து, ஒன்றாகப் போரிட்டு, ஒன்றாகவே வெல்லும் என கூறியுள்ளார். பிரதமர் மோடி பா.ஜனதா கூட்டத்தில் பேசியதையும் கெஜ்ரிவால் விமர்சனம் செய்துள்ளார்.