பிரத்யுமன் கொலை வழக்கு: நடத்துநரின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

சிறுவன் பிரத்யுமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேருந்து நடத்துநர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
பிரத்யுமன் கொலை வழக்கு: நடத்துநரின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை
Published on

புதுடெல்லி,

டெல்லி அருகே குர்கானில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த பிரதியுமன் (வயது 7) என்ற சிறுவன் கடந்த செப்டம்பர் 8-ந்தேதி பள்ளி கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தான். இது தொடர்பாக அந்த பள்ளியின் பேருந்து நடத்துனர் அசோக் குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். சிறுவனை அந்த நடத்துனர் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தி கொன்றதாக கூறப்பட்டது.

ஆனால் இந்த விவகாரத்தில் அதிரடி திருப்பமாக, அந்த பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஒருவனை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்தை நடத்தவும், தேர்வு ஒன்றை ஒத்திவைக்கும் நோக்கிலும் இந்த கொலையை அந்த மாணவன் செய்ததாக கண்டறியப்பட்டு உள்ளது. 16 வயதான அந்த மாணவனிடம் இருந்து, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியையும் அதிகாரிகள் கைப்பற்றினர். குர்கான் போலீசார், நடத்துநரை இந்த வழக்கில் சேர்த்ததாக குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்த நிலையில், சிறுவன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடத்துநர் அசோக் குமார் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. ஜாமீன் மனுவுக்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்காது என்ற தகவல்கள் வெளியாவதால், அசோக் குமாருக்கு ஜாமீன் கிடைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com