பாலியல் பலாத்கார வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் முக்கிய ஆதாரம் சிக்கியது


பாலியல் பலாத்கார வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் முக்கிய ஆதாரம் சிக்கியது
x
தினத்தந்தி 11 Jun 2024 3:19 AM GMT (Updated: 11 Jun 2024 6:09 AM GMT)

பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் செல்போன் முக்கியமான சாட்சியாக இருப்பதால் அதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்.

பெங்களூரு,

பாலியல் பலாத்கார வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவை நேற்று பெங்களூரு பசவனகுடியில் உள்ள, அவரது வீட்டிற்கு அழைத்து சென்று விசாரித்தனர். பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்களில் பிரஜ்வல் ரேவண்ணாவின் முகம் சரியாக தெரியவில்லை. ஏனெனில் செல்போனில் அவர் தான் வீடியோ எடுத்ததாகவும், இதனால் ஆபாச வீடியோக்களில் அவரது முகம் தெரியவில்லை. குரல் மட்டுமே பதிவாகி உள்ளது.

ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களின் முகம் தெளிவாக பதிவாகி இருக்கிறுது. அந்த வீடியோவில் பிரஜ்வல் ரேவண்ணா வீட்டின் படுக்கை அறையில் உள்ள ஜன்னல், கதவுகள், சுவர், சுவர்களில் தொங்கவிட்டுள்ள பொருட்கள், அலங்கார திரைசீலைகள் பதிவாகி உள்ளது. நேற்று போலீசார் நடத்திய சோதனையின் போது வீடியோவில் இருக்கும் காட்சிகளும், பிரஜ்வல் ரேவண்ணாவின் படுக்கை அறையின் சுவர்களில் உள்ள அடையாளங்களும் ஒன்றாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதன்மூலம் இந்த வழக்கில் முக்கிய ஆதாரம் போலீசாருக்கு கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விவகாரங்கள் பற்றி அந்த வீட்டில் வைத்தே பிரஜ்வல் ரேவண்ணாவிடம் போலீசார் விசாரித்து வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். இதற்காக கம்ப்யூட்டர், பிரிண்டரையும் போலீசார் எடுத்து சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பலாத்கார வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணாவை 10 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து இருந்தனர். ஆனால் அவர் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. குறிப்பாக பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த செல்போன் காணாமல் போய் விட்டதாகவும், அதுபற்றி போலீசில் புகார் அளித்திருப்பதாகவும் மட்டுமே பிரஜ்வல் ரேவண்ணா கூறினார். நேற்று முன்தினம் கூட செல்போன் குறித்து போலீசார் விசாரித்த போது, செல்போன் காணாமல் போன பின்பு தான் செல்போனே பயன்படுத்தவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

தனது கார் டிரைவர், கட்சி தொண்டர்களிடம் இருந்தே செல்போனை வாங்கி பேசியதாக பிரஜ்வல் ரேவண்ணா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் அந்த செல்போன் முக்கியமான சாட்சி ஆதாரம் என்பதால், அதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர். பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டில் பதுங்கிய போது, அவரது காதலி தான் பணஉதவி செய்திருப்பதால், அவரிடமும் விசாரித்து தகவல்களை பெறும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்


Next Story