தேர்தல் ஆலோசனை வழங்க இத்தனை கோடியா..? பிரசாந்த் கிஷோர் வெளியிட்ட தகவல்

பிரசாந்த் கிஷோர், தேர்தல் ஆலோசனை வழங்குவது தொடர்பான தனது கட்டணம் குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆலோசனை வழங்க இத்தனை கோடியா..? பிரசாந்த் கிஷோர் வெளியிட்ட தகவல்
Published on

பாட்னா,

நாட்டின் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர். இவர் பா.ஜ.க., மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க.வுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கெடுத்து வெற்றி பெற வைத்துள்ளார். அதற்காக அவர் பெறும் கட்டணம் குறித்து பல்வேறு தகவல்கள் கசிந்து வந்தன.

இந்தநிலையில் பிரசாந்த் கிஷோர் தனது கட்டணம் குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் பயணித்து வந்த பிரசாந்த் கிஷோர் பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகினார். தற்போது ஜன சுராஜ் (மக்கள் நல்லாட்சி) என்ற அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். பீகாரில் வருகிற 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர், தராரி ஆகிய சட்டசபை தொகுதிகளில் தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் பெலகஞ்ச் தொகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அவர், "புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள உங்களுக்கு (பிரசாந்த் கிஷோர்) நிதி எப்படி கிடைக்கிறது என்று நினைக்கிறீர்களா. நான் தேர்தல் வியூக வகுப்பாளர். அரசியல் கட்சிக்கு தேர்தல் ஆலோசனைகளை வகுத்து கொடுத்தால் அந்த கட்சியிடம் இருந்து கட்டணமாக ரூ.100 கோடிக்கும் அதிகமாக பெற்று இருக்கிறேன். இந்தியாவில் 10 மாநிலங்களில் எனது ஆலோசனைகளை கேட்ட கட்சிகள் ஆட்சியில் இருக்கிறது. எனவே எனக்கு நிதி என்பது ஒரு பிரச்சினை இல்லை. இந்த இடைத்தேர்தலில் இரண்டு பெரிய கட்சிகளுக்கு எதிராக (ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதாதளம்) வேட்பாளர்களை நிறுத்தியுள்ளேன். அவர்களை வெற்றிபெற செய்யுங்கள்" என்று அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com