காவல் நிலையத்திற்குள் புகுந்து கர்ப்பிணி பெண் காவலர் மீது கொடூர தாக்குதல்... இளைஞர் கைது

கர்ப்பிணி பெண் காவலர் மீது நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதல் குறித்து பெங்களூரு ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் காவலர்
Published on

பெங்களூரு,

கர்ப்பிணி பெண் காவலர் மீது இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புகார் அளிக்க வந்த இளைஞர்

கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி அதிகாலை 4 மணியளவில், கஜேந்திரா என்ற இளைஞர் தனது செல்போன் காணாமல் போனதாக புகார் அளிப்பதற்காக மெஜஸ்டிக் ரெயில்வே காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது காவல் நிலையத்தில் வேறு காவலர்கள் யாரும் இல்லாததால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலையில் பணிக்கு வந்ததும் புகார் அளிக்குமாறு ஷில்பா அவரிடம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கஜேந்திரா, காவல் நிலையத்திலிருந்து வெளியே சென்றுவிட்டு சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் காவல் நிலையத்திற்குள் வந்த அவர், இரும்புக் கம்பியை கொண்டு ஷில்பாவின் தலையில் இரும்புக் கம்பியால் 7 முதல் 8 முறை சரமாரியாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஷில்பாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சக காவலர்கள், ஷில்பாவை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இளைஞர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதலில் ஈடுபட்ட கஜேந்திராவை ரெயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். காவல் நிலையத்திற்குள்ளேயே கர்ப்பிணி பெண் காவலர் மீது நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதல் குறித்து பெங்களூரு ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com