மைசூருவில் தசரா விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்

யானைகளுக்கு பீரங்கி வெடி சத்தம் உள்பட பல்வேறு பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மைசூருவில் தசரா விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்
Published on

மைசூரு,

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியையொட்டி கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மைசூரு தசரா விழா தொடங்குவதற்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. இதையொட்டி தசரா விழாவிற்கான ஏற்பாடு பணிகள் மைசூருவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அதாவது டவுன் பகுதி முழுவதும் சாலைகள் சீரமைக்கும் பணி, மின்விளக்கு அலங்காரம், புதிய சாலை அமைக்கும் பணி, மலர்கண்காட்சி ஏற்பாடு பணிகள், அரண்மனை வளாகம், சாமுண்டி மலை கோவில் தூய்மைப்பணி, உணவு மேளா, இளைஞர் தசரா நடைபெறும் இடங்களில் மேடைகள் மற்றும் திண்பண்ட கடைகளை அமைக்கும் பணிகள், சாலையோரங்களில் தடுப்பு சுவர்களுக்கு வர்ணம் பூசும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

வழக்கம்போல தசரா யானைகளுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் மரத்தால் செய்த அம்பாரியை சுமந்து செல்லும் நடை பயிற்சிக்கு அழைத்து செல்கிறார்கள். இதை தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்து வருகிறார்கள். யானைகளுக்கு பீரங்கி வெடி சத்தம் உள்பட பல்வேறு பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அரண்மனையில் பழுதடைந்த மின்சார பல்புகளை அகற்றி புதிய பல்புகளை மாற்றும் பணிகள், சுத்தம் செய்யும் பணிகள் போன்ற அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. மைசூரு நகர் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் சுமார் 136 கிலோமீட்டர் தொலைதூரம் அளவிற்கு செய்வது, பூங்கா, சர்க்கிள்கள், மன்னர்கள் மற்றும் தேசியத் தலைவர்களின் சிலைகள், அரசு அலுவலக கட்டிடங்களுக்கு மின்விளக்கு அலங்காரம் செய்யும் பணிகள் விரைவில் முடிவடையும் தருவாயில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com