

புதுடெல்லி,
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. டெல்லியில் உள்ள நகரில் பல்வேறு மருத்துவமனைகளுடன் இணைந்து ரோகி கல்யாண் சமிதிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 26ந்தேதி ஆளும் அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல துறை வெளியிட்ட உத்தரவில், ரோகி கல்யாண் சமிதிகள் (நோயாளிகள் நல குழு) சுகாதார வசதிகள், வளர்ச்சி உள்ளிட்ட வசதிகளை வழங்கும். இந்த அமைப்புக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் மானிய உதவியாக வழங்கப்படும் என தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், இந்த அமைப்புகளின் தலைவர்களாக நியமிக்கப்பட்ட ஆளுங்கட்சியை சேர்ந்த 27 எம்.எல்.ஏ.க்கள் லாப நோக்கில் பதவி வகிக்கின்றனர் என குற்றச்சாட்டு எழுந்தது. அவர்களை தகுதி நீக்கம் செய்ய கோரி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அவர் இந்த மனுவை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினார். அவர்கள் இந்த மனு மீது அளித்த பரிந்துரையின்படி ஜனாதிபதி ராம்நாத் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளார்.