

கண்ணூர்,
கேரளம் மாநிலம் கண்ணூர் மாவட்டம் பேராவூர் சட்டமன்ற தொகுதியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி எம்.பி. நேற்று ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பிரதமருக்கு எதிராக யாராவது பேசினால், அவர்கள் மீது அமலாக்கத்துறை, வருவாய்த்துறை, சி.பி.ஐ. போன்ற மத்திய ஏஜென்சிகளை பயன்படுத்தி துன்புறுத்துவது வழக்கம். ஆனால், கேரளத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய முதல்-மந்திரி பினராயி விஜயன், அவரது குடும்பத்தினரை அரண் போல பிரதமர் மோடி பாதுகாத்து வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகளில் இடது முன்னணி ஆட்சியில், யாருக்காவது எந்த நன்மையாவது செய்து உள்ளார்களா?. மேலும் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு தேடி வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்கின்றனர்.
விலைவாசி அதிகரித்தும், அதனை கட்டுப்படுத்த மாநில அரசு தவறிவிட்டது. இங்குள்ள மக்கள் தங்களது குழந்தைகளை படிக்க வைப்பதற்காக பாடுபடுகின்றனர். கேரளத்தில் புத்திசாலியான மாணவ-மாணவிகள், இளைஞர்கள் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. இந்த நிலை மாற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.