

புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி இன்று சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானுடன் தொலைபேசியில் உரையாடியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உரையாடலின் போது தேசிய மற்றும் சர்வதேச அளவிலான முன்னேற்றத்தில் இரு தரப்பிற்கும் உள்ள பங்கு குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இருதரப்பு மூலோபாய கூட்டாண்மை கவுன்சிலின் செயல்பாட்டை அவர்கள் மதிப்பாய்வு செய்தனர். மேலும் இந்தியா-சவுதி கூட்டாண்மையின் நிலையான வளர்ச்சி திருப்திகரமாக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த உரையாடலின் போது பிரதமர் மோடி 2 நாடுகளிலும் வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவது குறித்த தனது விருப்பத்தை தெரிவித்தார். மேலும் சவூதி முதலீட்டாளர்களுக்கு இந்திய பொருளாதாரம் வழங்கும் வாய்ப்புகளை அவர் எடுத்துரைத்தார்.
கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஒருவருக்கொருவர் தொடர்ந்து ஆதரிக்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும் இன்றைய உரையாடலின் போது சவுதி இளவரசரை இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.