

புதுடெல்லி,
இந்தியாவின் உதவியுடன் இலங்கை முழுவதும் நெருக்கடி கால ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்துவதற்கான நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்து காணொலி காட்சி வழியாக பேசினார்.
அப்போது அவர், இலங்கையை ஒரு பக்கத்து நாடாக மட்டும் நான் பார்ப்பதில்லை. தெற்காசியாவில் மிகச் சிறப்பான, நம்பிக்கைக்கு உரிய கூட்டாளியாகத்தான் பார்க்கிறேன் என்று புகழாரம் சூட்டினார்.
மேலும், நல்ல தருணங்களிலும், மோசமான தருணங்களிலும் எப்போதுமே இலங்கை கூப்பிட்ட குரலுக்கு முதலில் பதில் அளிக்கும் நாடு இந்தியா என்றும் மோடி குறிப்பிட்டார்.
இலங்கைக்கு தான் மேற்கொண்ட பயணத்தின்போது, அந்த நாடு முழுவதும் நெருக்கடி கால ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்துவதற்கு உதவுவதாக வாக்குறுதி அளித்ததாகவும், அதை தற்போது நிறைவேற்றி வைத்து இருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.