பிரதமர் மோடி நாளை உத்தரகாண்ட் பயணம்

மேகவெடிப்பு மற்றும் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி நாளை உத்தரகாண்ட் செல்கிறார்.
பிரதமர் மோடி நாளை உத்தரகாண்ட் பயணம்
Published on

புதுடெல்லி,

கடந்த 5ம் தேதி உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில், திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக, குறைந்த நேரத்தில் அதிதீவிர மழை பெய்தது. இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், மலைப்பகுதிகளில் இருந்த வீடுகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 4 பேர் உயிரிழந்தனர். ராணுவத்தினர் உள்பட 69 பேர் மாயமாகினர். 1,200-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில், சமோலி, ருத்ரபிரயாக், தெஹ்ரி மற்றும் பாகேஷ்வர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த மேகவெடிப்பு மற்றும் தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 11 பேர் மாயமாகினர்.

இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்திற்கு பிரதமர் மோடி நாளை செல்கிறார். மாலை 4.15 மணிக்கு தலைநகர் டேராடூன் செல்லும் அவர், ஹெலிகாப்டர் மூலம் வெள்ள பாதிப்புகளை பார்வையிட உள்ளார். அதன்பிறகு, மாலை 5 மணியளவில் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

முன்னதாக, காலை 11.30 மணியளவில் உத்தரபிரதேசம் வாரணாசி செல்லும் பிரதமர் மோடி, மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலத்துடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி அந்த பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com