

புதுடெல்லி,
இன்ஸ்டாகிராம் எக்ஸ், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில், மத்திய மந்திரிகளின் சமூக ஊடக செயல்பாடுகள் முக்கிய விவாத பொருளாக அமைந்தது.
தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிக செல்வாக்கு படைத்து வரும் சமூக வலைதளங்கள் வாயிலாக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில், மத்திய மந்திரிகள் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் அவற்றின் தாக்கம் குறித்த விரிவான மதிப்பீட்டு அறிக்கை ஒவ்வொரு மத்திய மந்திரிகளுக்கும் வழங்கப்பட்டது.
மே 1-ந்தேதி முதல் ஆகஸ்டு 15-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் மத்திய மந்திரிகளின் செயல்பாடுகளை விவரிக்கும் மதிப்பீட்டு அறிக்கை அவர்களுக்கு அளிக்கப்பட்டது. கூட்டத்தில் அரசின் நலத்திட்டங்கள் இன்றைய இளம் தலைமுறையினரை சென்றடையும் முயற்சியின் ஒரு பகுதியாக, இளைஞர்களுடன் கலந்துரையாட ஒவ்வொரு நாளும் ஒரு மத்திய மந்திரி ஒரு பல்கலைக்கழகத்திற்கு செல்ல வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
நாள் முழுவதும் நடைபெறும் இத்தகைய பயணங்களின் போது, மத்திய மந்திரிகள் அரசின் திட்டங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள சாதனைகள் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும். அதேவேளையில், நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த அவர்களின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும். மத்திய மந்திரிகள் பிரகலாத் ஜோஷி, மன்சுக் மாண்டவியா ஆகியோர் இப்பயணங்களை ஒருங்கிணைப்பாளர்கள் என முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் மே 1 முதல் ஆகஸ்டு 15 வரையிலான காலகட்டத்திற்கான இன்ஸ்டாகிராம் எக்ஸ், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சமூக ஊடக செயல்பாட்டு மதிப்பீட்டு தரவரிசையில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்தார். இளைய தலைமுறையினரை சென்றடைய செல்பி வீடியோக்கள் மற்றும் நவீன டிஜிட்டல் உத்திகளை பிரதமர் மோடி தீவிரமாக பயன்படுத்தி வருகிறார்.
ஜென் சி, ஜென் ஆல்பா தலைமுறையினருடன் தொடர்பை வலுப்படுத்துங்கள் என மத்திய - மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். அனைவரும் சமூகவலைதளத்தில் செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.