

புதுடெல்லி,
டெல்லி பல்கலைக்கழகத்தின் ஸ்ரீராம் வணிகக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்ற பிரதமர் நரேந்திர மோடி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார். சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த பயணத்தின்போது, அவருடன் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.மெட்ரோ ரெயில் பெட்டியில் இருந்த பள்ளி மாணவர்களிடம் அவர்களின் படிப்பு, ஆர்வங்கள், பொழுதுபோக்குகள் மற்றும் எதிர்கால லட்சியங்கள் குறித்து மோடி கேட்டறிந்தார். மாணவர்களுடன் அவர் இயல்பாகவும், உற்சாகமாகவும் உரையாடினார்.
அப்போது பிரதமர் மோடிக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு மாணவர், மோடியிடம் யாருக்கு கேட்காத வகையில், ரகசியமாக உங்களை போல நான் ஆக வேண்டும் என்று சிறுவன் கூறினார். இதைக்கேட்ட பிரதமர் மோடி சிரித்துக்கொண்டே அவரிடம் கைகுலுக்கிய சம்பவமும் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைந்து இருந்தது.
மேலும், மெட்ரோவில் பயணம் செய்த பெண்கள் உள்ளிட்ட பயணிகளுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடினார். வாராணசியைச் சேர்ந்த சில பயணிகளிடமும் அவர் பேசினார்.இந்த மெட்ரோ பயணத்தின் புகைப்படங்கள் மற்றும் காட்சிகளை பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.