உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் குறித்து நாம் பெருமை கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்
Published on

புதுடெல்லி,

பண்டிகை நாட்களில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்கவேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ரேடியோ மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் (மன் கி பாத்) நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 137-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:-

உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை

.வரவிருக்கும் பண்டிகைக் காலத்தையொட்டி, இந்தியக் குடிமக்கள் அனைவரும் அரசின் ‘வோக்கல் பார் லோக்கல்’ (Vocal for Local - உள்ளூர் தயாரிப்புகளுக்குக் குரல் கொடுப்போம்) திட்டத்தை ஏற்றுக்கொண்டு, உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

நம்முடைய பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் நமது பாரம்பரியங்களைப் பேணிப் பாதுகாப்பது மட்டுமின்றி, நாம் ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்புகளையும் நமக்கு வழங்குகின்றன.

வோக்கல் பார் லோக்கல்'

'வோக்கல் பார் லோக்கல்' என்பது களிமண் அகல் விளக்குகளை வாங்குவதுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை; அதற்குப் பின்னால் உள்ள தொலைநோக்கு பார்வை மிகவும் பரந்தது.

நமது வீடுகளுக்கு நாம் எந்தப் பொருளை வாங்குவதாக இருந்தாலும், அது இந்தியாவில் தயாரிக்கப்பட்டதா (Made in India) என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உள்ளூர் தயாரிப்புகள் மீது பெருமை கொள்வது சுயசார்பு இந்தியாவின் பயணத்தை மேலும் வலுப்படுத்தும்.

இந்தச் செய்தியை முடிந்தவரை பல மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது நமது கடமையாகும். இதில் படைப்புலக நண்பர்கள், இன்ஃப்ளூயன்ஸர்கள் மற்றும் பிரபலங்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் புதுமையான முயற்சிகள் மற்றும் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்துப் பேசினார். அப்போது, தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல சுற்றுலாத் தலமான கொடைக்கானலைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகரன் என்பவரின் சாதனையை பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.

விவசாயிகளுக்கு பாராட்டு

தமிழ்நாடு, கொடைக்கானலைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகரன் அவர்கள் தனது அரை ஹெக்டேர் நிலத்தில் அவகோடா பழங்களைப் பயிரிடத் தொடங்கினார்.

தற்போதைய சந்தையில் இப்பழங்களுக்குக் கிடைக்கும் நல்ல விலையின் காரணமாக, அவருக்குப் பெரிய அளவில் லாபம் கிடைத்துள்ளதுடன், அவரது வருமானமும் பல மடங்கு அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

அவகோடா பழங்கள்

தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநில விவசாயிகளின் உழைப்பையும் பிரதமர் பாராட்டிப் பேசினார்.

ஆந்திர பிரதேசம் கடப்பாவைச் சேர்ந்த வரதராஜ் என்ற விவசாயி, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இதுவரை சுமார் 4 டன் அவகோடா பழங்களை உற்பத்தி செய்து, இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக உள்ளூர் கடைகளுக்கு விற்று நல்ல லாபம் ஈட்டி வருகிறார்.

கர்நாடகா மாநிலம் சிக்மகளூரு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது காபித் தோட்டங்களுக்கு நடுவே அவகோடா மரங்களை ஊடுபயிராக நட்டு, காபி மற்றும் மிளகுடன் சேர்த்து உபரி வருமானமும் ஈட்டி சாதனை படைத்து வருகின்றனர் மேலும் அனைவர்க்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

நகரத்து உணவகங்களில் அவகோடா

மேலும், "நகரத்து உணவகங்களில் அவகோடா டோஸ்ட் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆனால், இதே அவகோடா மூலம் நமது நாட்டின் புதுமைப்பித்த விவசாயிகளும் வருமானம் ஈட்டுவதற்கான ஒரு புதிய வழியைக் கண்டறிந்துள்ளனர்.

சுருக்கமாகச் சொன்னால், நமது நாட்டின் மண்ணில் விளைந்த அவகோடா, வாடிக்கையாளர்களின் உணவைச் சுவையாக்குவதோடு, மறுபுறம் இந்திய விவசாயிகளின் வருமானத்தையும் கணிசமாக உயர்த்தியுள்ளது என தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com