

புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், 2020-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். மேலும் இந்த 10 ஆண்டுகளுக்கான முதல் கூட்டத்தொடரும் இதுதான். இந்த பத்தாண்டின் வளமான எதிர்காலத்துக்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும். அதற்கான சிறப்பான அடித்தளத்தையும் அமைக்க வேண்டும். இந்த கூட்டத்தொடரில் பொருளாதார பிரச்சினைகளை விவாதிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அந்த வகையில் இரு அவைகளிலும் இந்த பிரச்சினைகள் தொடர்பாக சிறப்பான விவாதங்கள் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.
சுரண்டலை அனுபவித்து வரும் தலித், பெண்கள் போன்ற அடித்தட்டு மக்களுக்கு அதிகாரமளித்தலே தங்கள் அரசின் அடையாளமாகும் என கூறிய பிரதமர் மோடி, இந்த நடவடிக்கைகளை தொடர விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.