கடன் தொல்லையால் தனியார் நிறுவன அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை

கடன் தொல்லையால் தனியார் நிறுவன அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடன் தொல்லையால் தனியார் நிறுவன அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

மங்களூரு-

உடுப்பி மாவட்டம் மணிப்பால் போலீஸ் எல்லைக்குட்பட்ட சிவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராகவேந்திரா(வயது 49). இவர் மணிப்பாலில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் ராகவேந்திராவுக்கு பணம் தேவைப்பட்டது. அதன்படி அவர் ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்க முடிவு செய்தார். இதையடுத்து ராகவேந்திரா ஆன்லைன் செயலி மூலம் ரூ. 25 ஆயிரம் வரை கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அவரால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் ராகவேந்திராவுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஆன்லைனில் வாங்கிய கடனை திரும்ப செலுத்துமாறு பேசினர். அதற்கு அவர் சில நாட்களில் கடனை செலுத்தி விடுகிறேன் என கூறினார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் கடனை திரும்ப செலுத்துமாறு ராகவேந்திராவிடம் மீண்டும் தொடர்பு கொண்டு பேசினர். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராகவேந்திரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மணிப்பால் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராகவேந்திராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மணிப்பால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Daily Thanthi
www.dailythanthi.com