

புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நகரில், கைதான முன்னாள் போலீஸ் அதிகாரி எஸ்.ஆர்.தாராபுரியை சந்திக்க நேற்று காரில் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவை போலீசார் இரு முறை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அவர் காரில் இருந்து இறங்கி எஸ்.ஆர்.தாராபுரியின் வீட்டுக்கு நடந்து சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து பேசினார்.
அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய பிரியங்கா, காரில் இருந்து இறங்கிய தன்னை போலீசார் சூழ்ந்து கொண்டு தடுக்க முயன்றதாகவும், அப்போது தான் தாக்கப்பட்டதாகவும், ஒரு பெண் போலீஸ் தனது கழுத்தை பிடித்ததாகவும், இன்னொரு பெண் போலீஸ் தன்னை தள்ளிவிட்டதாகவும், இதனால் தான் கீழே விழுந்ததாகவும் கூறினார்.
ஆனால் பிரியங்காவின் இந்த குற்றச்சாட்டை பெண் போலீஸ் அதிகாரி அர்ச்சனா சிங் மறுத்து உள்ளார்.
டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மிதா தேவும், லக்னோ நகரில் பிரியங்கா போலீசாரால் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். உத்தரபிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் அப்போது அவர் கூறினார்.