

புதுடெல்லி,
எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது பணிநியமனம் செய்தது சட்டவிரோதம் என்ற உத்தரவு செல்லும் என ஐகோர்ட்டு உத்தரவை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்டு.
அதிமுக ஆட்சியில் எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது 2021-ம் ஆண்டு கோவை மாநகராட்சியில் இளநிலை உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 654 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 440 பேர் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். இதில், 54 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
இந்தப் பணி நியமனத்தை எதிர்த்து, 2016 ஆம் ஆண்டு கருணை அடிப்படையில் தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்ட ஈஸ்வரி உள்ளிட்ட சிலர் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிபதி, தேர்வு நடைமுறையில் பங்கேற்காத நிலையில் இந்த பணி நியமனத்தை எதிர்த்து வழக்குத் தொடர உரிமையில்லை என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து, ஈஸ்வரி உள்ளிட்ட 11 பேர் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். அந்த மனுவில், உரிய தகுதிகள் இருந்தும் இந்தப் பணி நியமனம் குறித்து முறையாக விளம்பரம் செய்யப்படாததால் இளநிலை உதவியாளர் பணிக்கான தேர்வில் கலந்துகொள்ள முடியவில்லை. விதிமுறைகள் மற்றும் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் ஒரே நாளில் 54 பேர் நியமிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த சுப்பிரமணியம், செந்தில்குமார் ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு, புறவாசல் வழியாக இந்த நியமனம் நடந்துள்ளதாகக் கூறி பணி நியமனத்தை ரத்து செய்வதாக உத்தரவிட்டனர். இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியான நபர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்த பணி நியமனங்கள் சட்ட விரோதமானவை என்று கூறி ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கோவையில் 54 இளநிலை உதவியாளர்களை பணி நியமனம் செய்தது சட்டவிரோதம் என்று கூறி ஐகோர்ட்டு உத்தரவை உறுதி செய்துள்ளது. மேலும் அவர்கள் அனைவரையும் உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு. இதன்மூலம் அவர்களுக்கு அரசு வேலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த பணியிடங்கள் பணம் பெற்றுக் கொண்டு நிரப்பப்பட்டதாக ஒரு புறம் புகார்கள் இருக்கும் நிலையில் எஸ்.பி வேலுமணிக்கு இதன் மூலமாக புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.