

திருப்பதி,
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்துக்கான முதல் தரை தள சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' என்ற கனவு திட்டத்தை செயல்படுத்தும் பணியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி கடந்த 2018-ம் ஆண்டு அறிவித்த இந்த திட்டம் மூலம் 3 பேர் கொண்ட குழுவினர் பூமியில் இருந்து 400 கி.மீ. உயரத்திலுள்ள சுற்றுப்பாதைக்கு 3 நாட்கள் பயணமாக அனுப்பி வைக்கப்படுவார்கள்.
பின்னர் இந்திய கடற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறக்குவதன் மூலம் மனித விண்வெளி பயணத்திறனை நிரூபிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது இந்த திட்டம். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆளில்லா ராக்கெட்டில் 'வயோமித்ரா' என்ற எந்திர மனிதனை விண்வெளிக்கு அனுப்பி சோதனை நடத்தப்பட உள்ளது.
தொடர்ந்து, 2 ஆளில்லா ராக்கெட்டுகளை அனுப்பவும், அடுத்த ஆண்டு (2027) மார்ச் மாதம் மனிதர்களை அனுப்பவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக இஸ்ரோ 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சோதனைகளை செய்துள்ளது. இதில் 85 சதவீத சோதனைகள் நிறைவடைந்துள்ளன.
இந்தநிலையில், சோதனைகளுக்கான துணை சுற்றுப்பாதை ராக்கெட் 'ககன்யான்' குழு கலனுக்கான முக்கிய அமைப்புகளை, குறிப்பாக பாராசூட் வேகக்குறைப்பு அமைப்பை சரிபார்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பிரத்யேக திட மோட்டாரின் முதல் தரை தள சோதனை, ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் நேற்று வெற்றிகரமாக நடந்தது.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, 'ககன்யான் சோதனை பயணங்களை நடத்துவதற்கு திட மோட்டார் ஒரு முக்கிய அங்கமாகும். ககன்யான் குழு கலத்தின் வேகக்குறைப்பு அமைப்பை சரிபார்ப்பதற்காக, ஒருங்கிணைந்த பாராசூட் சோதனைகளை மேற்கொள்ள ஒரு சோதனைத்தளம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த சோதனை பயணங்களின் போது. குழுவினர் பயணிக்கும் கலம் தரையில் இருந்து 10 முதல் 17 கி.மீ. உயரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, விண்கலத்தில் இருந்து பிரிக்கப்படும். கடலில் விழுவதற்கு முன்பு, குழு கலத்தின் வேகத்தை குறைப்பதற்காக 10 பாராசூட்டுகள் தொடர்ச்சியாக விரிக்கப்படும்.
சோதனையின்போது மோட்டாரின் செயல்திறன் அளவுருக்கள் எதிர்பார்த்தபடியே இருந்தது. இதன் மூலம் சோதனை முழுமையாக வெற்றி பெற்றுள்ளது' என்றனர்.