மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிப்பு: சோனியாவுடன் சரத்பவார் சந்திப்பு - அமித்ஷா-பட்னாவிஸ் ஆலோசனை

பாரதீய ஜனதா-சிவசேனா இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக மராட்டியத்தில் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், சோனியா காந்தியை சரத்பவார் சந்தித்து பேசினார். இதேபோல் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிப்பு: சோனியாவுடன் சரத்பவார் சந்திப்பு - அமித்ஷா-பட்னாவிஸ் ஆலோசனை
Published on

புதுடெல்லி,

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், 161 இடங்களை வென்ற பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆட்சி அமைப்பதில் இவ்விரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. ஆட்சியில் சமபங்கும், சுழற்சி முறையில் 2 ஆண்டுக்கு முதல்- மந்திரி பதவியும் வழங்க வேண்டும் என சிவசேனா நிர்ப்பந்தம் செய்து வருகிறது.

இதை ஏற்க மறுக்கும் பாரதீய ஜனதா, தேவேந்திர பட்னாவிசை மீண்டும் முதல்-மந்திரி ஆக்குவதில் உறுதியாக இருக்கிறது.

இதனால் தேர்தல் முடிவுகள் வெளியாகி நேற்றுடன் 12 நாட்கள் ஆகியும் புதிய ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

தங்கள் கோரிக்கையை பாரதீய ஜனதா ஏற்காத பட்சத்தில் காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்போம் என சிவசேனா மிரட்டி வருகிறது. சிவசேனா தலைமையில் புதிய அரசு அமைய 170 எம்.எல். ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக அக்கட்சி பகிரங்கமாக தெரிவித்து இருக்கிறது.

பாரதீய ஜனதா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் காங்கிரஸ், தேசியவாத கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியில் சிவசேனா மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.

இதனால் மராட்டியத்தில் புதிய அரசு பாரதீய ஜனதா தலைமையில் அமையுமா? அல்லது சிவசேனா தலைமையில் அமையுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த பரபரப்பான சூழ் நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடம் நடைபெற்றது.

அப்போது, மராட்டியத்தில் புதிய அரசு அமைப்பதில் பாரதீய ஜனதா-சிவசேனா இடையே ஏற்பட்டு இருக்கும் இழுபறி நீடித்து வருவது குறித்தும், அதனால் எழுந்துள்ள சூழ்நிலைகள் பற்றியும் இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com