தேனீக்கள் பாதுகாப்பு நம் வருங்காலத்தின் பாதுகாப்பு; பிரதமர் மோடி உரை

தேனீக்களை பாதுகாப்பது என்பது நம்முடைய வேளாண்மை மற்றும் வருங்கால தலைமுறையினரையும் பாதுகாக்கும் விசயம் ஆகும்.
தேனீக்கள் பாதுகாப்பு நம் வருங்காலத்தின் பாதுகாப்பு; பிரதமர் மோடி உரை
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடி வானொலியில் மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமையில் மக்களுக்கு உரையாற்றும் மன் கி பாத்தின் 122-வது நிகழ்ச்சியில் இன்று பங்கேற்று பேசினார். அப்போது அவர், நகர்ப்புற பகுதிகளில் தேன் கூடுகளை நீக்கும்போது, அதனை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இளைஞர் ஒருவருக்கு தோன்றி அதற்கான முயற்சியில் ஈடுபட்டார் என சுட்டிக்காட்டி பேசினார்.

அவர் பேசும்போது, தேனீக்களை பாதுகாப்பது என்பது சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்று மட்டுமில்லாமல், நம்முடைய வேளாண்மை மற்றும் வருங்கால தலைமுறையினரையும் பாதுகாக்கும் விசயம் ஆகும். அதற்கான எடுத்துக்காட்டு ஒன்றை நான் கூறுகிறேன். புனே நகரை சேர்ந்த அமித் என்ற இளைஞர் வசித்து வந்த வீட்டு வசதி குடியிருப்பில் இருந்த தேன் கூட்டை சிலர் நீக்கியுள்ளனர்.

அப்போது, அதனை நீக்க கூடாது. தேன்கூட்டை பாதுகாக்க வேண்டும் என அமித் நினைத்துள்ளார். பின்னர் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். தேனீக்களை பற்றிய ஆய்வில் ஈடுபட்டு, தேனீக்களின் நண்பர்கள் என்ற குழு ஒன்றை உருவாக்கினார். இந்த குழுவினர், தேன் கூடுகளை ஓரிடத்தில் இருந்து பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மாற்றும் பணியை செய்து வருகின்றனர்.

இதனால், மக்களுக்கும் ஆபத்து இல்லை. தேனீக்களும் உயிருடன் பாதுகாக்கப்படுகின்றன என பிரதமர் பேசியுள்ளார். மே 20-ந்தேதி உலக தேனீக்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், அதனை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசினார்.

அவர் கூறும்போது, இந்தியாவில் 10, 11 ஆண்டுகளுக்கு முன் ஆண்டுக்கு 75 ஆயிரம் டன் என்ற அளவிலேயே தேன் உற்பத்தி நடைபெற்றது. ஆனால், இன்றோ 1.25 லட்சம் டன் தேன் உற்பத்தி நடைபெறுகிறது. இது 60 சதவீதம் அதிகம் ஆகும் என்று பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com