ஜார்க்கண்டில் சட்டசபை வளாகத்தை நெருங்கிய போராட்டக்காரர்கள்: போலீசார் தடியடி

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரெயில்கள், பஸ்கள் மற்றும் வாகனங்கள் மூலம் மாணவர்கள் ராஞ்சிக்கு வந்தனர்.
போலீசார் தடியடி
Published on

ராஞ்சி,

ஜார்க்கண்ட் பொது பணியாளர் தேர்வாணையம் மற்றும் ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு ஆட்சேர்ப்பு தேர்வுகளில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும், முறைகேடுகள் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு மூலம் விசாரணை நடத்த வேண்டும், ஆட்சேர்ப்பு நடைமுறைகளில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்துள்ளனர்.

தடுப்புகளை மீறி முன்னேறிய மாணவர்கள்

மாணவர்கள் போராட்டம் 17-வது நாளை எட்டியுள்ள நிலையில்,அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, இன்று சட்டசபை நோக்கி பேரணியாக செல்ல போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் மாணவர்கள் முடிவு செய்தனர். இதற்காக ராஞ்சியில் உள்ள மைதானத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டனர். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரெயில்கள், பஸ்கள் மற்றும் வாகனங்கள் மூலம் மாணவர்கள் ராஞ்சிக்கு வந்தனர்.

பேரணியை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் பல்வேறு இடங்களில் தடுப்புகளை அமைத்திருந்தனர். சட்டசபையை நோக்கி மாணவர்கள் முன்னேறியபோது சில இடங்களில் தடுப்புகளை தாண்டி அவர்கள் செல்ல முயன்றனர்.இதையடுத்து போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தடியடி நடத்தியும் மாணவர்களை விரட்ட முயன்றனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் காணப்படுகிறது.

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

மாணவர்கள் பேரணி காரணமாக ராஞ்சி நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. முக்கிய சந்திப்புகள் மற்றும் சட்டசபையை சுற்றியுள்ள பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மாணவர் போராட்டத்தை முன்னிட்டு ராஞ்சியில் பெரும்பாலான பள்ளிகளும் இன்று மூடப்பட்டன. மாணவர்கள் ராஞ்சிக்குள் நுழைவதை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட எல்லைகள் மற்றும் முக்கிய சாலைகளில் பஸ்கள், தனியார் வாகனங்களும் சோதனை செய்யப்பட்டன.

அரசுடன் பேச்சுவார்த்தை தோல்வி

மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. மாணவர்களின் 98 சதவீத கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால், மாணவர்கள் இதை ஏற்க மறுத்துள்ளனர். தாங்கள் ரத்து செய்யக் கோரிய 13 தேர்வுகளில் 3 தேர்வுகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே முக்கிய கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com