கருப்பு பூஞ்சை தொற்றுக்கு இலவச சிகிச்சை: பிரதமர் மோடியிடம் சோனியா காந்தி வலியுறுத்தல்

கருப்பு பூஞ்சை தொற்றுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார்.
கருப்பு பூஞ்சை தொற்றுக்கு இலவச சிகிச்சை: பிரதமர் மோடியிடம் சோனியா காந்தி வலியுறுத்தல்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வைரஸ் பரவலுக்கு மத்தியில் கருப்பு பூஞ்சை தொற்றும் பரவி வருகிறது. இந்த தொற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அதிகமாக தாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை தொற்று காரணமாக 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆம்போடெரிசின் பி மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்படி டெல்லி, தெலுங்கானா, ஒடிசா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கோவா, உத்தர பிரதேசம், குஜராத், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஆம்போடெரிசின் பி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கருப்பு பூஞ்சை தொற்றுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும். லிபோசோமால் ஆம்போடெரிசின்-பி மருந்து கருப்பு பூஞ்சை தொற்று சிகிச்சைக்கு முற்றிலும் அவசியம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இருப்பினும் சந்தையில் அதற்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கருப்பு பூஞ்சை தொற்றுக்கு ஆயுஷ் மான் பாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 299-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 3 லட்சத்து 57 ஆயிரத்து 630 பேர் குணம் அடைந்துள்ளனர். மேலும் 4,194 பேர் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com