சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி பொதுநல மனு தாக்கல்: இருமல் மருந்து வழக்கில் இன்று விசாரணை

ராசிபலன்
இதுதொடர்பாக பல இடங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிடக்கோரி, பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி,
பச்சிளம் குழந்தைகள் இருமல் மருந்து குடித்ததால் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மராட்டிய மாநிலங்களில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் மத்திய பிரதேசத்தில் மட்டும் குறிப்பிட்ட இருமல் மருந்து கொடுக்கப்பட்ட 22 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்தனை பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த குறிப்பிட்ட இருமல் மருந்தின் பெயர் ‘கோல்ட்ரிப்' என்பதாகும்.
இதற்கிடையே இதுதொடர்பாக பல இடங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிடக்கோரி, வக்கீல் விஷால் திவாரி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், கோர்ட்டு கண்காணிப்புடன் விசாரணைக்கு உத்தரவிடுமாறும், ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அல்லது தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்குமாறும் அவர் கோரியுள்ளார். மருந்து பாதுகாப்பு நடைமுறையில் முறையான சீர்திருத்தங்கள் வகுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு வக்கீல் விஷால் திவாரி நேற்று ஆஜராகி, மனுவை அவசர விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினார். அதை ஏற்ற நிதிபதிகள், 10-ந் தேதி (இன்று) விசாரணை நடைபெறும் என்று கூறினர்.






