புதுச்சேரி அ.தி.மு.க. செயலாளர் புருசோத்தமன் மறைவு; முதல் அமைச்சர் பழனிசாமி அஞ்சலி

புதுச்சேரி அ.தி.மு.க. செயலாளர் புருசோத்தமன் மறைவுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
புதுச்சேரி அ.தி.மு.க. செயலாளர் புருசோத்தமன் மறைவு; முதல் அமைச்சர் பழனிசாமி அஞ்சலி
Published on

புதுச்சேரி,

புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளராக பதவி வகித்து வந்தவர் புருஷோத்தமன் (வயது 71). முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஆவார். இவருக்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சிறுவள்ளிக்குப்பம் கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது.

இவர் தினமும் காலையில் புதுச்சேரியில் இருந்து சிறுவள்ளிக்குப்பம் சென்று அங்குள்ள தனது நிலத்தில் விவசாய பணிகளை பார்வையிடுவது வழக்கம்.

இதேபோல் நேற்று காலையில் தனது விவசாய நிலத்துக்கு சென்று பணிகளை அவர் பார்வையிட்டார். மதியம் 1.15 மணியளவில் அப்பகுதியில் திடீரென மழை பெய்தது. அப்போது அங்குள்ள மரத்தின் அருகே புருஷோத்தமன் ஒதுங்கி நின்றார். அந்த மரத்தில் இருந்த விஷவண்டு புருஷோத்தமனை கடித்தது. இதில் அவர் அந்த இடத்திலேயே மயங்கி கீழே விழுந்தார்.

இதை பார்த்த அவரது உதவியாளர் செங்கேணி அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு புருஷோத்தமனை கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

புருஷோத்தமனுக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், 5 மகள்களும் உள்ளனர். அதில் 2 மகள்கள் பிரான்சில் வசிக்கின்றனர். புருஷோத்தமன் உடல் மணவெளியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று வைக்கப்படுகிறது. நாளை இறுதி சடங்குகள் நடைபெறும்.

இந்த நிலையில், விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள புதுச்சேரி அ.தி.மு.க. செயலாளர் புருசோத்தமன் உடலுக்கு தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com