

புதுச்சேரி,
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்-அமைச்சராக ரங்கசாமி கடந்த மாதம் 13-ந்தேதி பதவியேற்றார். அவருடன் அமைச்சர்களாக நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் பதவியேற்றனர். இந்த நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கடந்த 3-ந்தேதி கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து பேசினார்.
அப்போது புதிய அமைச்சர்களாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜவேலு, சிவக்கொழுந்து, பாஜகவைச் சேர்ந்த ஜி.என்.எஸ். ராஜசேகரன் ஆகிய 3 பேரை பரிந்துரை செய்து கடிதம் வழங்கினார். இதனை தொடர்ந்து புதிய அமைச்சர்களாக 3 பேரை நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.
இந்த நிலையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு அமைச்சர்கள் ராஜவேலு, சிவக்கொழுந்து, ஜி.என்.எஸ். ராஜசேகரன் ஆகியோருக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்களுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் இலாகா ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.