

புதுச்சேரி,
புதுச்சேரியில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கலும் நேற்று தொடங்கி உள்ளது. வேட்புமனுவை தாக்கல் செய்ய வருகிற 23-ந் தேதி கடைசி நாள் ஆகும். வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளன. அதில் 2 நாட்கள் அரசு விடுமுறையாகும். இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது.
இந்த நிலையில் சென்னை அறிவாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதுவை தி.மு.க.வினருக்கான வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே புதுவை மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு, யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்று எதுவுமே முடியவடையவில்லை. இதனால் அந்த கட்சியில் போட்டியிட திட்டமிட்டுள்ள வேட்பாளர்கள் இன்னும் தொகுதிகள் இறுதி செய்யப்படாததால் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர்.
இந்த சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்கள், பா.ஜனதா கூட்டணிக்கு 14 இடங்கள் என்று முடிவு செய்தாலும் எந்தெந்த தொகுதி யாருக்கு என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஒரு சில தொகுதிகளை பெற 2 கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால் தொகுதிகளை முடிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் புதுச்சேரியில் பா.ஜ.க. உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை அம்மாநில முதல்-மந்திரி ரங்கசாமி புறக்கணித்துள்ளார். இதனால் 2 மணி நேரம் பேச்சுவார்த்தைக்காக காத்திருந்த பா.ஜ.க. நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்தனர். முன்னதாக லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணியில் சேர்க்க பா.ஜ.க. முடிவு செய்துள்ள நிலையில் ரங்கசாமி அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.