

புதுச்சேரி,
அசாம், கேரளம், புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் வ.உ.சி. அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் 'நிலா' என்ற ரோபோ வாக்காளர்களுக்கு பூ கொடுத்து வரவேற்ற காட்சி அனைவரையும் கவர்ந்தது.
பாரம்பரிய உடையான தாவணி அணிந்து, கையில் பூக்கள் அடங்கிய தட்டை ஏந்தியபடி நின்றிருந்த நிலா ரோபோ, வாக்காளர்களுக்கு பூக்கொடுத்து, அழகாக வரவேற்றது. இதை பார்த்த பொதுமக்கள் அந்த ரோபோவுடன் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தேர்தலில் வாக்காளர்களின் பங்கேற்பை அதிகரிக்கவும், வாக்குப்பதிவை ஒரு விழிப்புணர்வு நிறைந்த கொண்டாட்டமாக மாற்றவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலா ரோபோவை கோவையைச் சேர்ந்த 'ரோபோ மிரர்' என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. அந்த நிறுவனத்தின் பிரதிநிதி கவுசிக் இதுகுறித்து கூறும்போது, "நிலா ரோபோ விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு ரோபோ. திருமணங்கள், அரசு விழாக்கள் மற்றும் தேர்தல்கள் போன்ற தருணங்களில் பொதுமக்களுடன் உரையாடும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.