

புதுச்சேரி,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று புதுச்சேரிக்கு வருகை தந்தார். புதுவை காவல்துறையின் சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில் ஜனாதிபதியின் வண்ணக்கொடி விருது வழங்கும் விழாவில் அமித்ஷா பங்கேற்றார். அப்போது அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமித்ஷாவிற்கு முதல் மந்திரி ரங்கசாமி, துணை நிலை கவர்னர் கைலாஷ்நாதன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். பின்னர், அமித்ஷாவுக்கு காவல் துறையின் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
புதுச்சேரியில் காவல்துறை அணிவகுப்பின்போது கடும் வெயிலின் காரணமாக பெண் காவலர்கள் உள்ளிட்ட 4 பேர் திடீரென மயக்கமடைந்தனர். காவல்துறை அணிவகுப்பின்போது வெயிலால் மயக்கமடைந்த காவலர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.