தொழிற்சாலைகளில் ஊரடங்கு விதிமீறல் இருந்தால் தண்டனை நடவடிக்கை உரிமையாளர்களுக்கே பொருந்தும் - மத்திய அரசு விளக்கம்

தொழிற்சாலைகளில் ஊரடங்கு விதிமீறல் காணப்பட்டால், அதற்கான தண்டனை நடவடிக்கை உரிமையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
தொழிற்சாலைகளில் ஊரடங்கு விதிமீறல் இருந்தால் தண்டனை நடவடிக்கை உரிமையாளர்களுக்கே பொருந்தும் - மத்திய அரசு விளக்கம்
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடி, ஊரடங்கு மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக கடந்த 14-ந் தேதி அறிவித்தார். அப்போது, 20-ந் தேதிக்கு பிறகு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று கூறினார். அதன்படி, கடந்த 15-ந் தேதி, மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

அதில், ஊரக பகுதிகள், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் சில தொழிற்சாலைகள் இயங்கலாம் என்றும், ஊழியர்களை தொழிற்சாலை வளாகத்திலேயே தங்க வைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. விதிமீறல்களும், தண்டனை நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, தண்டனை நடவடிக்கை தொடர்பாக சில ஊடகங்கள் திரித்து தகவல் வெளியிடுவதாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரிய வந்தது. அதாவது, தொழிற்சாலை வளாகத்தில், எந்த ஊழியருக்காவது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அதன் இயக்குனர்கள் மற்றும் நிர்வாகத்துக்கு தண்டனை வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வகை செய்வதாக அச்செய்தியில் கூறப்பட்டு இருந்தது.

இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று விளக்கம் அளித்தது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சில ஊடகங்களில் வெளியான தகவல் எங்கள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், பேரிடர் மேலாண்மை சட்டப்படி, ஊரடங்கு விதிமீறல் தண்டனை நடவடிக்கை, தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

அதுவும், உரிமையாளர்களின் ஒப்புதலுடனும், அலட்சியத்தாலும், அவர்களுக்கு தெரிந்தும் குற்றங்கள் நடந்தால்தான், அவர்கள் மீது தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com