

அமிர்தசரஸ்,
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாப் மாநிலத்தில், வருகின்ற பிப்ரவரி 14-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது.
அதே வேளையில், காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய முன்னாள் முதல் மந்திரி அமரிந்தர் சிங், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார். இதனால், காங்கிரஸ் கட்சிக்கு கடும் சவாலை இந்தக் கூட்டணி அளிக்கும் எனத் தெரிகிறது. அதேபோல், ஆம் ஆத்மி கட்சியும் களம் இறங்கி உள்ளது.
பஞ்சாபில் பலமுனைப் போட்டி நிலவும் சூழல் உள்ளதால் தேர்தல் களம் அனல் பறக்கத்தொடங்கியுள்ளது. இதற்கிடையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 86 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி 2 கட்டங்களாக வெளியிட்டது.
அதில் முதல்-மந்திரி சரண் ஜித் சன்னி சம்குர் சாகிப் தொகுதியிலும், மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கிழக்கு அமிர்தசரஸ் தொகுதியிலும், சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட் மோகா தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 8 பேர் கொண்ட மூன்றாவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
அதில் பஞ்சாப் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி பதூர் தொகுதியிலும் போட்டியிடுகிறார். முன்னதாக சம்குர் சாகிப் தொகுதியில் அவர் போட்டியிடுவதை கட்சி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.