

புதுடெல்லி,
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அபாரமாக வெற்றிப் பெற்று காங்கிரஸ், பாஜகவை ஓரங்கட்டி ஆம் ஆத்மி முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. கடந்த 16-ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பூர்வீக கிராமமான கட்கர் கலனில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்ட விழாவில் பஞ்சாப் முதல் மந்திரியாக பகவந்த் மான் பதவியேற்றார்.
பஞ்சாப் முதல் மந்திரியாக பதவியேற்ற பிறகு முதல்முறையாக பகவந்த் மான் இன்று காலையில் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து பிரதமரின் அலுவலக டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. பஞ்சாப் மாநில மக்களுக்கு தேவையான ஒத்துழைப்பை மத்திய அரசு வழங்கும் என்று நம்பிக்கை இருப்பதாக முதல் மந்திரி பகவந்த் மான் கூறினார்.
இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், 'நான் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பஞ்சாப் பிரச்சனைகள் குறித்து பேசினேன். பஞ்சாபில் உள்ள பிரச்சனைகளுக்கு மத்திய அரசிடம் இருந்து தேவையான ஆதரவு கிடைக்கும் என்று நான் உண்மையாக நம்புகிறேன்' என்று முதல் மந்திரி பகவந்த் மான் பதிவிட்டுள்ளார்.