

சண்டிகர்,
பஞ்சாப்பில் பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ஹர்ஜித் சிங் (வயது 50). இவர் இன்று அதிகாலை அம்ரித்சரின் கேட் ஹகிமா பகுதியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, துப்பாக்கியுடன் பைக்கில் வந்த இருவர் போலீஸ் அதிகாரி ஹர்ஜித் சிங் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த ஹர்ஜித் சிங்கை மீட்ட சக போலீசார் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஹர்ஜித் சிங்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றவர்களை தேடி வருகின்றனர். மேலும், இந்த துப்பாக்கி சூட்டிற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேவேளை, சுட்டுக்கொல்லப்பட்ட உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஹர்ஜித் சிங்கின் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் அறிவித்துள்ளார்.