

அமிர்தசரஸ்,
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாப் மாநிலத்தில், வருகின்ற பிப்ரவரி 14-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது.
அதே வேளையில், காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய முன்னாள் முதல் மந்திரி அமரிந்தர் சிங், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார். இதனால், காங்கிரஸ் கட்சிக்கு கடும் சவாலை இந்தக் கூட்டணி அளிக்கும் எனத் தெரிகிறது. அதேபோல், ஆம் ஆத்மி கட்சியும் களம் இறங்கியுள்ளது.
பஞ்சாபில் பலமுனைப் போட்டி நிலவும் சூழல் உள்ளதால் தேர்தல் களம் அனல் பறக்கத்தொடங்கியுள்ளது. இதற்கிடையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 86 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி கடந்த 15 ஆம் தேதி வெளியிட்டது.
அதில் முதல் மந்திரி சரண் ஜித் சன்னி சம்குர் சாகிப் தொகுதியிலும், மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கிழக்கு அமிர்தசரஸ் தொகுதியிலும், சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட் மோகா தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.