

சண்டிகர்,
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது.
இந்த நிலையில் தற்போது ஒரு சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் துவங்கியுள்ளது. அந்த வகையில் மராட்டிய மாநிலம் நாக்பூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, வரும் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. மேலும் மராட்டியத்தின் பிற மாவட்டங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக அந்த மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இதே போல பஞ்சாப் மாநிலத்திலும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பட்டியாலா மாவட்டத்தில் இன்று 110 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,087 ஆக அதிகரித்துள்ளது. தற்போது பட்டியாலாவில் 907 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த பட்டியாலா மாவட்டத்தில் 12 ஆம் தேதி(நாளை) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அடுத்த உத்தரவு வரும் வரை இந்த அறிவிப்பு தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.