போராட்டக்காரர்களிடம் நஷ்டஈடு வசூலிக்க பேனர் வைப்பதா? - உத்தரபிரதேச அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட்டு கடும் கண்டனம்

போராட்டத்தின் போது சேதம் அடைந்த சொத்துகளுக்கு நஷ்டஈடு வசூலிப்பதற்காக சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படங்களுடன் பேனர் வைத்த உத்தரபிரதேச அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.
போராட்டக்காரர்களிடம் நஷ்டஈடு வசூலிக்க பேனர் வைப்பதா? - உத்தரபிரதேச அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட்டு கடும் கண்டனம்
Published on

பிரயாக்ராஜ்,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் கடந்த டிசம்பர் மாதம் 19-ந் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. அப்போது பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடம் இருந்து நஷ்டஈடு வசூலிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்தது. இதற்காக பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் என கூறி 53 பேரின் புகைப்படங்கள் மற்றும் பெயருடன் லக்னோ மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடந்த வியாழக்கிழமை நகரின் முக்கிய இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டன. பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதற்கான நஷ்டஈடு தொகையை செலுத்த தவறினால், அவர்களுடைய சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில் இந்த பேனர்கள் வைக்கப்பட்டதாக உத்தரபிரதேச அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்த பேனர் விவகாரம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அலகாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர், நீதிபதி ரமேஷ் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் தாமாக முன்வந்து இந்த பேனர் விவகாரம் குறித்து விசாரணை நடத்தியது. அப்போது, எந்த சட்டத்தின் கீழ் இந்த பேனர்கள் வைக்கப்பட்டன? என்பது குறித்து லக்னோ போலீஸ் கமிஷனர் சுஜித் பாண்டே, மாவட்ட கலெக்டர் அபிஷேக் பிரகாஷ் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அத்துடன் குடிமக்களை அவமதிக்கும் எந்த நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளக்கூடாது என்றும் கூறினார்கள்.

விடுமுறை தினமான நேற்று இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள், அரசின் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டது தனிநபர் உரிமைகளை பறிக்கும் செயல் என்று கூறி உத்தரபிரதேச அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் அந்த பேனர்களை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா, உத்தரபிரதேச ஆட்சியாளர்கள் அரசியல் சட்டத்துக்கு மேலானவர்கள் போல் செயல்படுவதாக கூறி கண்டனம் தெரிவித்து உள்ளார். ஐகோர்ட்டு கூறியுள்ளபடி பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com