5ஜி டவர்களுக்கான கதிர்வீச்சு வரம்பு உயர்வு - மத்திய அரசு நடவடிக்கை

புதிய விதிமுறைகள் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது.
5ஜி டவர்களுக்கான கதிர்வீச்சு வரம்பு உயர்வு - மத்திய அரசு நடவடிக்கை
Published on

புதுடெல்லி,

5ஜி சேவையை விரிவுபடுத்தும் வகையில், செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சுக்கான அதிகபட்ச வரம்பை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. புதிய விதிமுறைகள் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது.

சிக்னல்

இந்தியாவில் தற்போது 5ஜி டவரில் ஒரு சதுர மீட்டருக்கு 5 வாட் என்ற அளவில் உள்ள கதிர்வீச்சின் அதிகபட்ச மின் அடர்த்தி, இனி 10 வாட்- ஆக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் ஒரு டவரில் இருந்து அதிக தொலைவுக்கு சிக்னல் கிடைப்பதுடன், அதிக பரப்பளவில் சேவை வழங்க முடியும். புதிய கோபுரங்களை அமைப்பதற்கான தேவையும், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செலவும் குறைய வாய்ப்புள்ளது.

5ஜி சேவை விரிவாக்கத்துக்கு தற்போதைய கதிர்வீச்சு வரம்புகள் தடையாக இருப்பதாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தன. இந்தியா இதுவரை சர்வதேச கதிர்வீச்சு பாதுகாப்பு ஆணையத்தின் பரிந்துரைகளைவிட கடுமையான வரம்புகளை பின்பற்றி வந்தது. 1 வாட் என்றிருந்த வரம்பு கடந்த ஆண்டு 5 வாட் ஆக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 10 வாட் ஆக உயர்த்த மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது.

முதலீட்டுச் செலவு

இந்த புதிய வரம்பு ஐரோப்பிய யூனியன் நாடுகள், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பின்பற்றப்படும் அளவுக்கு இணையானது. இந்த மாற்றத்தால் 5ஜி சேவையை விரிவுபடுத்தி வரும் வோடபோன் ஐடியா நிறுவனத்துக்கு அதிக பயன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 5ஜி சேவையை விரிவுபடுத்தியுள்ள பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களும் ஏற்கனவே உள்ள டவர்களை சிறப்பாக பயன்படுத்தி கூடுதல் முதலீட்டுச் செலவை குறைக்க முடியும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com