ரபேல் போர் விமானம் வருவது எப்போது? - பிரான்ஸ் தூதர் தகவல்

ரபேல் போர் விமானம் வருவது எப்போது என பிரான்ஸ் தூதர் தகவல் தெரிவித்துள்ளார்.
ரபேல் போர் விமானம் வருவது எப்போது? - பிரான்ஸ் தூதர் தகவல்
Published on

புதுடெல்லி,

இந்திய விமானப்படைக்கு ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டுடன் மத்திய பா.ஜனதா கூட்டணி அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வரும் வேளையில் முதல் ரபேல் விமானம் வரும் செப்டம்பர் மாதம் இந்தியா வந்து விடும் என தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்ட்ரி சீக்லர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், பெங்களூருவில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனை சந்திப்பதற்கான சிறப்புரிமை எனக்கு கிடைத்தது. அப்போது ராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக கருத்து பரிமாற்றம் செய்தோம். மேலும், சர்வதேச அரங்கில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், எல்லா வடிவத்திலுமான பயங்கரவாதத்தையும் எதிர்ப்பதற்கு இந்தியாவுக்கு பிரான்ஸ் தனது ஆதரவை அளிக்கும் என்று குறிப்பிட்டேன் என கூறி உள்ளார்.

டி.வி. சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ரபேல் போர் விமானங்களை இந்தியா தேர்வு செய்தது, எங்களுக்கு கவுரவம். இன்னும் 7 மாதங்களில் (செப்டம்பரில்) முதல் விமானம் இந்திய விமானப்படையில் சேரும் என குறிப்பிட்டார்.

பெங்களூருவில் விமான கண்காட்சியில் ரபேல் போர் விமானம் கலந்து கொண்டு சாகசம் செய்தது பார்வையாளர்களை கவர்ந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com